ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, November 30, 2013

குரு பலம்

ஒருவர் ஜாதகதக்தில் குரு பலம் பெற்றிருப்பது முக்கித்துவம் வாய்ந்தது. குரு பலமே நாம் எடுத்த காரியத்தில் வெற்றி தரும். குரு பலம் இருந்தால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், திருமணத்தடை போன்றவை நீங்கும்.

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்திலும், மற்ற ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலமான சுமார் நான்கரை மாதங்களிலும், "குரு பலம் வந்துவிட்டது' என்று கொண்டு திருமண முயற்சிகளை செய்வது மரபு.

ஒருவருக்கு திருமண பாக்கியம் கிடைக்க குரு பலம் அவசியம். குரு பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும்  அந்த இடத்திலிருந்து 5,7,9ம் இடத்து பார்வை பெற்ற ஸ்தானங்கள் குரு பலம் அடைகின்றன.  

குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். குரு பகவானின் அருள் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மிக முக்கியமானது, குருபலன் இருந்தால்பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும் எனவும், குருவின் அருள் இருந்தால் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையும்நிலவி வருகிறது.

குருவின் செயல்கள்

சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும்.  ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் - வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் குரு நின்ற இடம்  பாழ் என்ற சொற்றொடரும், அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்ற ஜோதிட வாக்கும் ஏற்பட்டன.
 

லக்னத்தில் குரு: லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு  விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும். அதே நேரத்தில் லக்னத்தில் தனித்து இருந்தால் பல்வேறு வகையான சிக்கல்கள்  உண்டாகும். மிகப் பெரிய குழப்பவாதியாக ஜாதகரை உருவாக்குவார். சுயமுடிவு செய்யும் தன்மையை இழக்க வைப்பார்.

இரண்டில் குரு:
 லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.  திக்குவாய் கோளாறு ஏற்படலாம். குடும்பத்தில் ஏதாவது வாக்கு வாதங்கள் இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்கும். அல்லது வரவிற்கும் செலவிற்கும்  சரியாக இருக்கும்.

ஐந்தில் குரு:
 லக்னத்திற்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் குழந்தை பாக்ய தடை அல்லது காலம் கடந்து குழந்தைகள்  பிறப்பது, உடற்குறையுள்ள புத்திரர்கள், புத்திரர்களால் நிம்மதியற்ற தன்மை, புத்திரசோகம் என ஏற்படும்.

ஏழில் குரு:
 லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும்.  குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டி வரும். ஆனால், ஏழாம்  இடத்தில் இருந்து குரு லக்னத்தை பார்ப்பதால் அந்தஸ்து, கௌரவம், புகழ், அதிகாரம் போன்றவை ஜாதகருக்கு உண்டாகும்.

பத்தில் குரு:
 லக்னத்திற்கு பத்தாம் இடமான தொழில், உத்யோக ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால் வியாபாரம், தொழிலில் ஏதாவது  சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும், அடிக்கடி தொழிலை மாற்றுவார். பல தொழில்கள் செய்தாலும் எதிலும் பிடிப்பு இருக்காது. தொழில் செய்யும்  இடங்களில் வழக்குகள் மற்ற குறுக்கீடுகள் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றம், வழக்குகள் என  ஏற்படலாம். ஆனால், பத்தாம் இடத்தில் இருந்து குரு நான்காம் வீட்டைப் பார்ப்பதால் உடல் ஆரோக்யம், மண், மனை, வீடு, வாகன யோகம்  உண்டாகும்.

குருவும் - கேதுவும்

கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்ல
லாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம்மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.

குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்துஅதிகாரம்  கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர்  இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார். ஆன்மிக விஷயங்களில்  ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசைதிரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.

வியாழ வட்டம்
 

ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த  ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப்  பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு  மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.

ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகமும் அடிப்பட்டு குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் அவன் பிழைத்துவிடலாம்.  அப்படி என்ன தான் குரு கிரகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் நாம் முன்ஜென்மத்தில் சேர்த்து வைத்த புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் நமக்கு தருபவர் குரு கிரகம்.
குரு பலன் கோச்சாரபடியும் நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியும்

கல்யாணம் எனக்கு எப்போது நடக்கும் சார் என ஒருவர் ஜாதகம் கொடுத்து கேட்டால் முதலில் அவர் ராசிக்கு குரு பலம் இருக்கா என பார்க்கணும்.அதன் பிறகு அவர் ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி எங்கு இருக்கார் 7 மிடத்தில் என்ன கிரகம் இருக்கு,7 ஆம் இடத்தை எந்த கிரகம் பார்க்குது...சுக்கிரன்,செவ்வாய் 6,8,12 ல் மறைஞ்சு இருக்கான்னு பார்த்துட்டுதான் திசா புத்தி பார்க்குறோம்..குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன்,புதன்,7க்குடையவன் ,9க்குடையவன்,5க்குடையவன் புத்தி நடந்தா திருமணம் சீக்கிரம் நடக்கும்.


குருபலம்  உள்ள  காலங்களில் நாம் எந்த விதமான  புது முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக நடைபெறும். குருபலம் உள்ள நேரத்தில் தான் மகிழ்ச்சி, பணபுழக்கம், திருமணம், குழந்தை, வியாபார மேன்மை, வெற்றிகள் போன்ற பலன்கள் கிடைக்கும். 
  
ஒன்பது கிரகஙகளில் குரு அதிக சுபபலம் பொருந்தியவர் என்பதால் அவர் தீமை செய்ய வாய்ப்பு குறைவு. எனவே குரு பலம் வரும் காலத்தில் திருமணம் , சுப நிகழ்ச்சிகள் மற்றும் நற்காரியஙகள் செய்து நன்மை பெறலாம்.

Monday, November 25, 2013

ப்ரசன்ன ஜோதிடம்

            பிற ஆருட முறைகளில் ஜோதிடர் பலன் கூறினால் தெய்வீக ஆருடத்தில் தெய்வமே பலன் கூறும். அப்படி பட்ட தெய்வீக ஆருட முறையான தேவ ப்ரசன்னத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

            முன்பு ஒரு காலத்தில் படைக்கப்பட்டு, இறைவனால் அருளப்பட்டு, ரிஷிகளால் காகப்பட்ட இந்த தெய்வீக முறை பலரின் கைகளில் மாட்டி மறைந்து கிடைக்கிறது. தேவப்பிரசன்னம் என்பதில் இரண்டு வார்த்தைகள் உண்டு. முதல் வார்த்தை தேவம் மற்றது ப்ரசன்னம். தேவம் என்றால் தெய்வீகம் என அர்த்தப்படுத்தலாம். தெய்வீகம் என்ற சொல்லை விளக்குவதை விட உணர்ந்தால் மட்டுமே புரியும். ப்ரசன்னம் என்ற வார்த்தையை விளக்குவது எளிது.

ப்ரசன்ன என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு ப்ரசன்ன என மொழி பெயர்க்கலாம். வேதத்தில் உள்ள ஒரு உபநிஷத்தின் பெயர் ப்ரசன்ன உபநிஷத். கேள்விகளால் தூண்டப்பட்டு இறை உண்மை விளக்கப்படுவதால் உபநிஷத் இப்பெயர் பெற்றது.

ஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் நம் முன் வரும் பொழுது என்னப்பா உனக்கு பிரச்சனைஎன பேச்சு வழக்கில் கேட்பார்கள் அல்லவா? அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை ஜோதிடர்களிடம் கூறும் பொழுது அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு பலன் சொல்லும் ஜோதிட சூட்சமத்திற்கு பிரசன்னம் என பெயர்.

பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்க்கையின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல், ஒரு கேள்வி அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து ஒரு ஜாதகம் பார்ப்பது என்பதே ப்ரசன்ன ஜோதிடம் என்பதாகும்.

ஒரு கேள்விக்கு ஒரு ஜாதகம் என்றேன் அல்லவா? அடுத்த கேள்வி கேட்கும் பொழுது முன்பு இருந்த ஜாதகத்தை விட்டு புதிய கேள்வி கேட்ட நேரத்தில் மீண்டும் ஜாதகம் கணிப்பார்கள். ஆக கேள்வி வர வர ஜாதகம் மாறும்..!

பிறந்த நேரத்தை கொடுத்தாலே ஜாதகம் கணித்து பதில் சொல்லலாமே ஏன் ஒவ்வொரு கேள்விக்கு ஜாதகம் போட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். வெளிப்படையாக கூறவேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பிறப்பு ஜாதகத்தில் பலன் கூற முடியாது. ஆம் இது முற்றிலும் உண்மை. உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்.

நான் வீடு வாங்குவேனா என கேட்டால் பிறப்பு ஜாதகத்தில் கூறிவிடலாம். ஆனால் நான் கும்பகோணத்தில் வாங்குவேனா இல்லை கோளப்பாக்கத்தில் வாங்குவேனா என கேட்டால் ப்ரசன்னம் தான் ஒரே வழி.

எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா என கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும், இதுவே எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. பிரசன்ன ரீதியாகவே பார்க்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலே கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றிப்பெறும் என கேள்வி எழுந்தால் இரு அணியில் விளையாடும் 22 நபர்களின் ஜாதகத்தை கணித்தா பலன் கூற முடியும்? அவ்வாறு செய்தால் மேட்சே முடிந்துவிடும். இதெற்கெல்லாம் பயன்படுவது பிரசன்ன ஜோதிடமே ஆகும்.

இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால் பிரசன்ன ஜோதிடத்தில் கூற முடியாததே எதுவும் இல்லை, அனைத்துக்கும் ஜோதிட பலன் கூற முடியும்.

பிறப்பு ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கலாம். நமக்கும் துல்லியமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரசன்னம் என்பது நீங்கள் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தை துல்லியமாக கூற முடியும். அதனால் பலனும் துல்லியமாக வரும்.

மின்சாரம் எப்பொழுது வரும்? கையில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் என்ன? நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூவா? இவை எல்லாம் பிரசன்னத்தில் முன்பே கூற முடியும். அதுவும் பொதுவாக இல்லை. மிக மிக துல்லியமாக, மைக்ரோ அளவில் கூற முடியும்.

பிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். கேரள ஜோதிடம் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்...!

பிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது. பராசரர், வராஹ மிஹிரர், காளி தாசர் இவர்கள் எல்லாம் பிரசன்ன ஜோதிடத்தில் திறன்மிகுந்தவர்களாக இருந்தவர்கள்.

இப்படிப்பட்ட மிக சக்தி வாய்ந்த பிரசன்ன ஜோதிடத்துடன் இறை சக்தி இணைந்தால் அதன் பெயர் தேவப்பிரசன்னம்...!

தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது?
கோயில் திருவிழாவிற்கு முன் ஒவ்வொரு வருடமும் தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை வழக்கத்தில் உண்டு. இன்றும் பல கோவில்களில் பார்க்கப்படுகிறது. தேவப்பிரசன்னம் மூலம் ஜோதிடர்கள் பல்வேறு விஷயங்களை மக்களுக்கு இறையாற்றல் மூலமாக கணித்து சொல்லி இருக்கிறார்கள்.

தேவப்ரசன்னத்தின் தன்மையை உணர ஓர் உண்மை சம்பவத்தை கூறுகிறேன். தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒரு பிரபல கோவிலில் விசித்திரமான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அங்கே திருவிழாவிற்கு முன் கொடி ஏற்றம் நடைபெறும் சமயம் கொடி ஏற்றுபவர் சுருண்டு விழுந்து இறந்துவிடுவார்...!

இதனால் திருவிழா நடக்காமல் தடைபடும். அடுத்த சிலவருடம் கழித்து மீண்டும் முயற்சி செய்வார்கள். அவ்வாறே கொடி ஏற்றுபவர் இறந்துவிடுவார். ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு மரணம் பார்த்த பிறகு அந்த கோவிலுக்குள் செல்லவே அனைவரும் பயந்து ஒதுங்கினார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் மக்கள் மீண்டும் திருவிழா கொண்டாட முன் வந்தார்கள். அதற்கு முன் சிலரின் வழிகாட்டுதலில் தேவப்பிரசன்னம் பார்த்துவிடுவது நல்லது என முடிவு செய்தார்கள். தெய்வம் தங்கள் மேல் கோபமாக இருக்கிறது போல என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆர்வமாய் இருந்தார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாளும் வந்தது. தேவப்பிரசன்னம் பார்த்து விட்டு அந்த ஜோதிடர்கள் குழு தலைவர் சொன்னார் அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!

கிராம மக்கள் திகைத்தார்கள். உங்களை போல....
அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!என அந்த ஜோதிடர் கூறியவுடன் ஊர் மக்கள் திகைத்தார்கள்.

நீங்கள் வெளியூரை சேர்ந்தவர் கொடி ஏற்றும் பொழுது ஏதேனும் விபரீதம் நடந்தால் எங்கள் ஊருக்கு அது அவப்பெயராக ஆகிவிடும். மேலும் சாஸ்திரம் கற்ற உங்களுக்கு விபரீதம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

நானாக இம்முடிவை எடுக்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்தியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இறைவனின் சன்னிதியில் நடக்கும் இறப்புக்கு ஒரு விடையை நாம் கண்டறிய வேண்டும். என்னை கொடியேற்ற அனுமதியுங்கள்என ஜோதிடர் கூறினார்.

திருவிழா கொடியேற்றும் நாளும் வந்தது. கோவில் புதுபொலிவுடன் காட்சியளிக்கப்பட்டது. ஊர் மக்கள் பக்தியுடனும் ஒருவித பய உணர்வுடன் குழுமி இருந்தனர். கோவிலின் உள்ளே கொடி பூஜை செய்யப்பட்டது. செண்டை மேழம் முழுங்க, துந்துபிகளும் கொம்பும் ஒலிக்க கொடி கோவிலின் பலிபீடம் அருகே கொண்டு வரப்பட்டது.
கொடியேற்றும் தருணம் வந்தது. மேழம் உச்ச நிலையில் வாசிக்கப்பட்டது. கொடிமரத்தையும் கொடியையும் ஜோதிடர் விழுந்து வணங்கினார்.

வணங்கி எழுந்தவர் கொடியேற்றாமல் திடிரென செண்டை மேழம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒரு முதியவரின் இரு கைகளை பிடித்துக் கொண்டார். மங்கள ஒலியுடன் இருந்த கோவில் திடீரென நிசப்தமாகியது.

என்ன நடக்கிறது என மக்கள் புரியாமல் பார்க்க.. ஜோதிடர் அந்த முதியவரை பார்த்து கேட்டார், “ஏன் இப்படி செய்கிறீகள்? இறைவன் சன்னிதிக்கு முன் ஏன் இந்த விபரீதம்? உண்மையை இறைவன் முன்னால் கூறுங்கள்

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர் பெருங்குரல் எடுத்து அழுதார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த முதியவர் உண்மையை கூறத் துவங்கினார். 
இக்கோவிலில் சிறுவயது முதல் நான் மேழம் வாசிக்கிறேன். என் பன்னிரெண்டு வயது முதல் செண்டை மேழம் கற்று வந்தேன். செண்டை தாளத்தில் ஒருவிதான வாசிப்பு முறையை என் குருவிடம் கற்றேன். . செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார். இசையின் மூலம் தற்காப்பு கலையை ரகசிய பயிற்சியாக கற்றுக்கொண்டேன். என் சிறிய வயதில் அதை சோதிக்க எண்ணி இக்கோவில் கொடியேற்றத்தில் பயன்படுத்தினேன். என் வாசிப்பால் ஒரு விளைவு ஏற்படுவதை கண்டு எனக்குள் ஒருவித பெருமிதம் அடைந்தேன்.

யாரும் இதை கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் இங்கே செய்து பார்த்தேன். என் வாசிப்பே பலரது மரணத்திற்கு காரணமாக இருந்தது. இனி இதுபோல செய்ய மாட்டேன், இனிவரும் காலத்தில் யாருக்கும் இம்முறையை கற்றுக்கொடுக்க மாட்டேன். இறைவனும் ஊர்மக்களும் என்னை மன்னிக்க வேண்டும். எனக் கூறு ஊர் மக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.

அவரை தவிர்த்து பிறர் வாசிக்க, கொடியேற்றப்பட்டது. திருவிழா துவங்கியது. ஜோதிடரின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள். இது எப்படி சாத்தியம் என வியப்புடன் ஜோதிடரிடம் கேட்டார்கள்.

தேவப்பிரசன்னம் வைக்கும் பொழுது சத்ருஸ்தானம் மற்றும் அபஸ்தானம் என்னும் இடத்தில் மாந்தியுடன் சனி என்ற கிரகம் அமர்ந்து கேடு பலனை அளித்து வந்தது. சனி அமர்ந்த ராசி காற்று ராசி இவைகளை முடிவு செய்து பார்க்கும் பொழுது முதிய வயதுடைய(சனி) மேழம்(காற்று-ஒலி) வாசிக்கும் ஒருவரால் அமங்கலம் ஏற்படுகிறது என்பதை கண்டுகொண்டேன். உதய லக்னத்திற்கு சனி நான்காம் இடத்தில் இருந்தது என்பதையும் குறித்துக் கொண்டேன்.

கொடியேற்றும் நாளில் பலிபீடத்தின் அருகே நின்று வாசித்தவர்களில் ஒரு முதியவர் நான்காவது நபராக நின்று வாசித்துக் கொண்டிருந்தார். அவர் இச்செயலுக்கு காரணம் என பிரசன்ன ரீதியாக முடிவு செய்து கண்டறிந்தேன்என்றார்.

பதினைந்து வருடத்திற்கு பிறகு ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினார்கள்.

தேவப்பிரசன்னம் என்பது ஒரே ஒரு ஜோதிடர் மட்டும் பார்க்கப்படும் ஜோதிடம் அல்ல. குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். மேலும் அந்த ஜோதிடர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் சாஸ்திரம் நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.

இக்குழுவுக்கு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் பிரசன்ன ஜாதகத்தில் கண்ட விஷயங்களை நான்கு நாட்கள் விவாதிப்பார்கள் பிறகே கருத்துக்களை வெளியிடுவார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை மிகவும் வித்தியாசமானது. பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தழுவி பார்க்கப்படும் ஜோதிட முறையாகும். சாதாரண மனிதனுக்கே ஜோதிடம் பார்க்க ஜோதிடர் எத்தனையோ சூத்திரங்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது அல்லவா? அப்படிப் பார்த்தால் கடவுளுக்கே ஜோதிடம் பார்க்க எவ்வளவு ஆற்றலுடன் பார்க்க வேண்டும் என யோசித்துப் பாருங்கள்.

ஜோதிடரிடம் நாம் ஆருடம் பார்க்க செல்லும் பொழுது நாம் வரும் நேரத்தை கொண்டு அவர் கிரகங்களை கணிப்பார். நாம் அவரின் இடம் விட்டு அகன்றதும் ஜோதிடர் நம்மை பற்றிய விஷயங்களை விட்டு அடுத்தவருக்கு ஜோதிடர் பார்ப்பார்.

ஆனால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தை கோவில்களில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்பதி நியதி. எளிமையாக சொல்லுவதானால் மனிதன் ஜோதிடரை தேடி செல்ல வேண்டும், தேவப்பிரசன்னத்தில் ஜோதிடர் கடவுளை தேடிப்போக வேண்டும்...!

கோவிலை நோக்கி பிரசன்னம் பார்க்க வீட்டை விட்டு கிளம்பும் நேரம், அச்சமயம் நடக்கும் சம்பவங்கள் (நிமித்தம்) துவங்கி கோவிலில் பிரசன்னம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேரும் வரை ஜோதிடர் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொள்வார். அவர் வீடு முதல் வீடு வரை நடந்த நிகழ்வுகள் கோவிலில் ஏற்பட்ட ஆருடம் இவை அனைத்தையும் ஒன்றினைத்து அடுத்த நாள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.

இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில் தேவப்பிரசன்னம் குழுவாகத்தான் பார்ப்பார்கள் என்றேன் அல்லவா? அவ்வாறு குழுவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் வீடு முதல் வீடு வரை நிகழ்வுகளை கவனிப்பார்கள். வெவ்வேறு ஊரில் இருந்து வந்து செல்லும் ஜோதிடர்களுக்கு, அடுத்த நாள் அனைவரும் கூடி விவாதிக்கும் பொழுது எல்லோருக்கும் நடந்த சம்பவம் மிகச்சரியாக ஒன்று போலவே இருக்கும். அனைவரும் பார்த்தது, கேட்டது, பேசியது என ஏதோ புரோக்கிராம் செய்தது போல இருக்கும்...!

நிமித்த அடிப்படையில் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருப்பதை கொண்டு இயற்கை அனைவருக்கும் பொதுவாக ஏதோ ஒரு கருத்தை கூற விரும்புகிறது என கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள்.

கோவிலுக்கு செல்லும் பொழுது நடக்கும் நிகழ்வுகள் இறந்தகாலத்தையும், கோவிலில் கிடைக்கும் பிரசன்னம் நிகழ்காலத்தையும், கோவில் முதல் வீடு வரை வரும் நேரம் நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தையும் குறிக்கும் என்பது தேவப்பிரசன்னத்தின் அடிப்படை சூத்திரமாகும்.

உதாரணமாக கோவிலுக்கும் செல்லும் நேரத்தில் அசிங்கமான அருவெறுப்பான விஷயங்களை காண நேர்ந்தால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவமானங்கள் நடந்து உள்ளது என்று குறித்துக்கொள்வார்கள். கோவிலில் கிடைக்கும் பிரசன்னத்தின் விடை முன்பு நடந்த செயலால் தற்சமயம் இறைநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது எவ்வாறு இருக்கிறது என்பதை உணர முடியும். பின்பு வீட்டிற்கு வரும் சூழல் நடக்கும் சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இறை நிலை கோவிலில் எவ்வாறு மேம்படுத்த முடியும் அல்லது நிலைபடுத்த முடியும் என்பதை காட்டும்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாள் பிறகு இரு நாட்கள் எடுத்துக்கொண்டு ஜோதிட குழு விவாதம் செய்யும். பிறகு அவர்கள் செய்த ஆய்வை பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே வெளியிட வேண்டும் என்பது நியதி. கோவில் நிர்வாகத்திடமோ அல்லது கோவில் சார்ந்த ஆட்களிடமோ பிரசன்ன பலன்களை தனியே கூறக்கூடாது. அவர்களையும் பொதுமக்களுடன் நிற்க சொல்லியே கூற வேண்டும் என்பது தேவப்பிரசன்னம் கூறும் நியதியாகும்.

ஜோதிடர்கள் குழு கூறும் பலன்களை பொதுமக்களுக்குள் அமர்ந்திருக்கும் ஜோதிடம் தெரிந்தவர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். அதற்கு ஜோதிட குழு தக்க பதில் கூற வேண்டும்.

நாங்கள் தேவப்பிரசன்னமே பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் என ஆணவம் இல்லாமல், பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு மிகப்பணிவுடன் பதில் கூற வேண்டும்.

லக்னத்தில் இவ்வாறு கிரகம் இருந்ததற்கு இன்ன பலன் என நீங்கள் கூறுகிறீர்கள் ஏன் இப்பலன் இவ்வாறு இருக்கக்கூடாது என ஒருவர் கேள்வி எழுப்பினால், ஏன் அவ்வாறு செயல்படாது என மிகவும் தன்மையாக விளக்க வேண்டும்.

ஜாதக சக்கரத்தில் பன்னிரெண்டு வீடுகள் இருப்பது நீங்கள் பார்த்திருக்கலாம். மனிதனுக்கு பன்னிரெண்டு வீடுகளில் ஏற்படும் பலன்களை ஜோதிடர் ஆய்வு செய்வார். லக்னம், தனம், தைரியம், சுகம் என பல்வேறு தன்மைகளில் ஜோதிடம் மனித வாழ்க்கையை பன்னிரெண்டு வகையான அடிப்படையில் பிரிக்கிறது.

தேவப்பிரசன்னம் செய்ய முதலில் யாகங்கள் செய்து, ஜாதக சக்கரத்தை கோவிலின் வடக்கு பகுதியில் வரைந்து கொள்வார்கள். பிறகு இறைவனை ஜாதக சக்கரத்தின் மையத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அச்சமயம் கோவில் கருவறையை பூட்டிவிடுவார்கள். இறை ஆற்றல் ஜாதக சக்கரத்தில் இருக்கும் அதனால் கருவறையை மூடிவிடும் சம்ப்பிரதாயம் உண்டு.

ஓம் என ஒரு பக்கம் எழுதப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு காசு, சில பூக்கள் மற்றும் அக்‌ஷதை இவற்றை ஒரு குழந்தையின் கையில் அளிப்பார்கள். கூட்டத்தில் உள்ள 11 வயதுக்கு உட்பட்ட குழந்தையாக தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து 12 ராசி கட்டங்களில் ஏதேனும் ஒரு ராசிகட்டத்தில் வைக்க சொல்லுவார்கள். மூன்று முறை ராசி கட்டத்தை வலம் வந்து அந்த குழந்தை எந்த ராசியில் கையில் உள்ள காசை
வைக்கிறதோ அதுவே லக்னம் என கொள்ளப்படும்.

காசு இருக்கும் ராசி முதல் வீடாக கொண்டு பண்ணிரண்டு ராசிகளின் பலன்களை கிரகிப்பார்கள். இச்செயலை ஒரு பல ஜோதிடர்கள் கொண்ட குழு செய்வார்கள்.


கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம்

பொதுவான ராசி பலன்கள்


எந்த ஜோதிடரும் பலன் சொல்வது - முதலில் அவர் லக்கினம் , மற்றும் பிறந்த ஜாதகம் வைத்து அங்கு இருக்கும் நவ கிரக நிலைகளை வைத்து - தற்போது கோசார ரீதியாக கிரகங்கள் எங்கு இருக்கின்றது என்பதைப் பொறுத்து மட்டுமே.

நாள் இதழ்களில் வரும் ராசி பலன்கள் - அனைத்தும் பொதுவான பலன்களே. 

நடப்பு தசா , புக்தி மோசமாக இருந்து - 
 TVல், பேப்பரில் நல்ல விதமாக போட்டு இருக்கிறார்களே....என்று உடனடியாக எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடாதீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்ல தசை ஓடிக்கொண்டு இருந்தால் - கோச்சார ரீதியாக மோசமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். 

அதைப் போலவே மோசமான தசை நடந்தாலும் - கோச்சார ரீதியாக நல்ல விதமாக இருந்தால் , ஓரளவுக்கு அந்த காலம் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும். 

ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கிறதென்றால் அது அந்த கிரகத்தின் நட்பு வீடா, பகை வீடா, உச்ச வீடா, நீச வீடா, ஆட்சி வீடா, சம சப்தம வீடா, கோணமா, கேந்திரமா, மறைவு ஸ்தானமா என்று பல விஷயங்களைப் பார்த்துத் தான் அந்த கிரகத்தின் வலிமையைக் கணிக்க முடியும். அதுவும் நவாம்சத்தில் அந்த கிரகம் என்ன வலிமை பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறும். மேலும் அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் உள்ளது, அந்த நட்சத்திரத்தின் அதிபதி யார், அவன் சுபனா, அசுபனா என்பதைப் பொறுத்தும் பலன்கள் மாறுபடும்.

எந்த பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் - உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி , எந்த பெரிய காரியத்திலும் இறங்க வேண்டாம்

Thursday, November 21, 2013

ஏழரைச் சனி

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்...

மற்ற கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசி களையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் நாட்டிலும் தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள்.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அது முதல் கட்டச் சனி. அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச் சனி எனப்படும். அடுத்து ஜென்ம ராசிக்கு மாறும் சனி (2-ஆம் கட்டம்) ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் இருக்கும். அது ஜென்மச் சனி எனப்படும்.

 அதைவிட்டு விலகி ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில்  சனி வரும்போது (மூன்றாம் கட்டச் சனி) இரண்டரை வருடம் பாதச் சனி, குடும்பச் சனி, வாக்குச் சனி எனப்படும். இப்படி மூன்று கட்ட மாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும். ஜாதகரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனி தசை என்பது வேறு; கோட்சாரரீதியாக வரும் ஏழரைச் சனி என்பது வேறு.

சிறு வயதில் வரும் முதல் சுற்றை (7.5 ஆண்டு)  மங்கு சனி என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை (7.5 ஆண்டு)  பொங்கு சனி என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை (7.5 ஆண்டு) அந்திம சனி என்றும் அழைப்பர்.

பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். படிப்பில் கவனம் செலுத்தவில்லை, காதல், கவன சிதறல், உறவினர்கள் மரணம், வேலையில்லா திண்டாட்டம்என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். 
பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும். பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.. சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம். அவை விதிவிலக்கு.

கணவன் - மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.  ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும். இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும். 
2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம். 
முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. , இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர், மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட், கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும், கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள்.  வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால், அதலபாதாளம்தான்.  இன்னொரு விஷயம்... நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும், அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.

 சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோ, சந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும்.
ராகு தசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன. துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார். ஒருவருடைய  ஜாதகத்தில்  சனி உச்சம் பெற்றுறிருந்தால்  71/2 சனி
பாதிப்பு குறையும். ஒருவரது  ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும், 71/2 சனி கெடுதல் செய்யாது . ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு  3,6,10,11-ல் சனி அமர்ந்தாலும்  71/2 சனி கெடுதல்  குறையும். மகரம் அல்லது கும்ப  லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில் இருந்தால் 71/2 சனியும் கெடுதல் குறையும் , தவிர அவருக்கு சுகமான வாழ்வு கிட்டும் . சனி உச்சம் பெற்று துலா  ராசியில் இருந்தால் அது    கேந்திரம்  அல்லது  திரிகோணம்  என்று இருந்தால் அவருக்கு கெடுதல் குறையும்

அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்க

அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால் கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக இருக்கலாம்.

 திருநள்ளாறு தலத்திலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார். இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது என்று பாருங்கள்.


சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.  

 சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.

சனி வரலாறு


நவகிரகங்களில் முதன்மையான ஆதிகிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநு, யமன் (மகன்கள்); யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள்.  அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறி விட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்படி உருவாக்கப்பட்டவளே சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர். சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படிதான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல் சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி அவளும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண் மகனும், அடுத்து சனி பகவா னும் பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர். சாயாதேவிக்கு குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதை அறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்ம ராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்து கொண்டு சஞ்ஞிகையை "ஓடிப்போனவள்' என்று உதாசீனமாகப் பேசவே, யமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனி பகவானின் வலதுகால் ஊனமானது